உன் கோயில் கருவறை முன் ..!
&
இறைவா ..! இறைவியே ..!
கடவுளே என்பதைவிட தாயே தந்தையே எனத்
துணையாய் அழைப்பதில் நிம்மதியே தனி ---
தனித் தனியே ஏக்கங்களை ஏற்றபடி புலம்பி
தனித் தனியே ஏக்கங்களை ஏற்றபடி புலம்பி
விழி ஏரிகளை உடைத்து விடுவதில் ஓர் நிறைவு --
என் இல்லத்தில் சிறு பிறையில் தனிமைச் சந்திப்புகளை விட
கோயிலில் நின்ற திருக்கோலத்தில் கற்பூர தீபாராதனைகளில்
நெஞ்சு நெகிழ இரு கை பரப்பிப் பரவசமாய்ப்
பலரிடையும் என்னில் என்னுள் ஒன்றி நிற்பதில் சுகம் ---
நீங்கள் எட்டவே கருவறை இருளில்
கறுப்பாய்க் காலங்காலமாக கால்வலிக்க நின்றாலும் --
என் குறைநிறை கண்களின் பார்வை வீச்சில்
மெழுகி வைத்த ஒரு பாறைத் துண்டு எனவே தோன்றிடினும் --
இறை அருளோர் உன் அழகை அங்கம் அங்கமாய்த்
தம் பாமாலைகளில் தொடுத்து பரவசப் பட்டிருப்பினும் --
ஒன்றை நினைந்து நினைந்து நான் திகைத்துப் போகிறேன் --
உங்கள் எட்டாத பாதங்களை இங்கிருந்து எட்டி எட்டித் தொட்டிட
என் முந்தையோர் எத்தனை தலைமுறைகள் நிலம் வீழ்ந்து இருப்பர்--
தம் நெஞ்சில் தூசித் துளிகளை பிரசாதமாய் ஏற்று இருப்பர் !
பாத அரவிந்தங்களில் நம்பிக்கைகளை நட்டு இருப்பர்--
எத்தனை ராஜ கர்வங்கள் தலை தாழ்ந்து பணிந்து இருக்கும் !
எத்தனை பாபங்கள் பரிகாரம் தொழுதிருக்கும் !
உங்கள் முன் எத்தனை சரித்திரங்கள் திறந்து மூடியிருக்கும் !
எத்தனை இளமைகள் முதுமைக் கூன் பெற்று மடிந்து இருக்கும் --
ஆம் ..அமைதியாய் அனைத்திற்கும் நிலைக்களனாய்
எதனையும் எடுத்துரைக்காத ஓர் மர்மப் புன்னகையாய் --
இன்னும் பன்னூறு ஆண்டுகள் அழிவிலாது இப்படியே
எம் முன் அழிவுகளை ஆக்கங்களை அசையாத பார்வையோடு
நம்பிக்கை ஊற்றாய் நின்று இருப்போம் எனும் மொழி கேட்கிறது --
இந்தச் சிந்தனையில் என் குறை மறந்தும் நிம்மதியாய் வழி நடந்தேன்
-------சந்திர கலாதர்
No comments:
Post a Comment