அம்மா உனக்கு மட்டும் எப்படி....?
[ இறுதிப் பகுதி ]
&
உதவாக்கரை என்றெனை விளித்து இடிப்பார் --
கோடை மழையின் படு தீவிரத்தோடு திடும் எனக்
கடும் வசவுகள் கொண்டு நையப் புடைக்கிறார்--
நச்சு நாவுகள் நெஞ்சில் அறைவதும்
ருத்ர விழிகள் சினந்து குவிந்து சுட்டு எரிப்பதும்
இரக்கமற்ற முகக் குறியீடுகள் வெட்டி
விரட்டி அடிப்பதும் தாங்குதற் கிலையே--
அம்மா !
இவர்கள் கோப மின்னல்கள் கண்களைப் பறிப்பன !
தனிவழிப் பாதையில் இருள்மிகத் தெளிப்பன !
உடல் தள்ளாடி வீட்டினுள் நுழைகிறேன் -
மரண மௌனமாய் உன்முன் நிற்கிறேன் --
கிழிந்த உயிருள் நைந்த உடலை மறைத்துப் பார்க்கிறேன் --
உலர்ந்துபோன உதட்டு விளக்கினில்
சிறு சிரிப்புச் சுடரினை ஏற்றிப் பார்க்க வீணே முயல்கிறேன் --
தப்பிப் பீறிடும் பெருமூச்சுக் கற்றைகள்
போரிடும் சுடர்களை விழுங்கி விடுவன --
ஆனால் மடியும் மாலையின் மயங்கும் ஒளியில்
தனித்த வீட்டில் ஏகாந்த ரூபியாய் அன்புத் தாயே !
கீழ்வருவன பகர்ந்து வியக்க வைக்கிறாய் !
" பொன் கனவுகளின் பெரும் பேரரசே !
உலக நெஞ்சங்களின் அன்புத் தலைவனே !
என் வாழ்த்துக் கூரையின் குளிர்நிழல் விரிப்பில்
தாயன்புச் சுடர் அரியணை அமர்வாய் --
நிலவுப் பார்வையை நோய் மனங்களில்
மென்மையாய்ச் சொரிவாய் இனிமையைப் பொழிவாய் --
நறுமணத் தென்றல் மலர் வருடல்களால்
நெஞ்சில் எரியும் வேதனைப் புண்களை அன்பாய் ஆற்றுவாய் --
&
அன்புத் தாயே !
இவ்வுலகம் முழுதும் ஆளுவேன் நான் எனும்
அச்சேதி உனக்கு மட்டும் எங்கிருந்து வந்தது ?
நீஎனை உனது வற்றிய கரங்களில் பெருமையாய் உயர்த்தி
உன்னதச் சுடர் அரியணையில் ஆர்வமாய் ஏற்றிட --
சிதிலமான சிறு வீட்டினுள் உருவிலா மணிமுடி ஒன்றை
சுருங்கிய கரங்களில் நடுங்கிடப் பிடித்து
அந்தி மயங்கும் குருட்டு வேளையில்
குருடும் செவிடும் மண்டிய உலகினை
ஆளப் பணித்து முடிசூட்டி மகிழ்கிறாய் -
&
' கனவுகள் பொரிக்கும் வீண் சூனியக்காரன் ! ' என்பதாய்ச்
சேதி எங்கிருந்து அம்மா இவர்களைச் சேர்ந்து
பட்டப் பகலின் கூரிய ஒளியில் தற்காப்பில்லா என்
ஆன்மாவதனை விழிகளால் எற்றியும் உதைத்தும்
சொற்சாட்டை கொண்டு அடித்தும் அறைந்தும் வதை செய்கின்றார் --
பிடரியைப் பிடித்துக் கருணையேயின்றிப் பொல்லா விதி
உலுக்கிய பின்னே பயங்கரன் தோல்வியின் கரங்களில்
விசிறி எறிந்திடப் பேய் உதை ஒன்றைத் தோல்வி தொடுத்திட
வீட்டின் முன்பு இருட் குட்டையுள் குவியலாய் வீழ்கிறேன் --
தட்டுத் தடுமாறி படுக்கையுட் சரிகிறேன்-
விம்மல் நதியினை விழுங்கிட முயல்கிறேன் --
ஆர்ப்பரித்து மோதும் கண்ணீர் அலைகளை
அணையிட்டு அடைத்திட முயன்று தோற்கிறேன் --
என்னுட் புகுந்த பேய்களின் ஊளையும்
கூச்சலும் அரற்றலும் தாங்கவும் கூடுமோ ?
அவநம்பிக்கை நுரைத்திடும் நச்சுக் கோப்பையை
நெடிதாய் முடிவாய் நோக்கி நிற்கிறேன் --
அழகிய கோப்பையின் வசீகர இடையை
உள்ளங்கைளுள் இறுக்கிப் பிடுக்கிறேன்--
என்னிற் புகுந்து என்னையே அழிக்கும் பேய்களை எல்லாம்
ஈர்த்திடும் நஞ்சினை மடக்கெனக் குடித்து மாய்த்திட முனைகிறேன் --
&
அந்நொடி சரியாய் --ஒர்நொடி நழுவலில் நான் மாய்ந்திருப்பேன்--
அழைப்பின் நாதம் அலையாய் அணைக்குது -
" என் மலர்க் கனவின் வண்ணத்துப் பூச்சியே !
இதயக் கடலின் மென்னிசைதன்னில்
தனித்துச் செல்லும் வெண்பாய்த் தோணியே !
இருள் நஞ்சு நிறைக் கீழ்வான் கோப்பையில்
பொங்கும் பூதமேக நுரையுள் இருந்து
எத்தனை அழகாய் எழுகிறான் முழுமதி !
எத்துணை விரைவில் அது வளருது பாராய்
தன் அழகில் ஒளியில் ஒயிலில் மகிழ்வில் !
இதனை உன் இணையிலாக் கற்பனை நனைத்து
என் இதயம் நெகிழ்ந்திட ஓர் கவிதை தாராய் !
என் கானகத் தேவே ! கற்பனைக் குயிலே ! "
&
உள்ளே விரைந்து கோப்பையை உதைக்கிறேன் --
பால் நிலவதனின் மென்மை ஒளியில்
மெழுகுச் சிலையாய் பாச விழிகளின் உருக்கிடும் பார்வையில்
மரண நிசப்தம் போர்த்து நிற்கிறேன் --
தலைதனை நிமிர்த்தி அடர்பார்வை மெல்ல நுழைகிறேன் --
இருண்ட அவநம்பிக்கை மேகப் பொதிகளில்
உதய நம்பிக்கையின் மென்ஒளிக் கீற்றினை
வயோதிக விழிகளின் மங்கிய விரிவில் தெளிவுறக் காண்கிறேன் !
&
----சந்திர கலாதர்