சாதீ !
&
'சாதி '--
ஓர் ஈரெழுத்துப் பயங்கரம் !
'சாகாத தீ '--
சாதி வேடம் பூண்டதோ ?
சாதியின் உள்
'சதி' உண்டுதானே !
சாதி ...
எதைச் 'சாதி'த்தது ?
'மதி'யை மிதித்துத் துவைத்தது --
ரத்தச் சேற்றில் திளைத்தது !
சாதிச் சகதியில்
இந்தியாவே சிக்கித் தவிக்குது --
காற்றிலா வெற்றிடம் கூடும் ;
சாதியிலா நெஞ்சும் உண்டோ ?
எங்கும் எதிலும் இது --
அஹ்ரிணையும் அமிழ்ந்து போனது --
சாதிப் பூ ...சாதி மல்லி
சாதிக் குதிரை ..சாதி வைரம் !
மேடை முழங்கினான் -
"சாதி என்போரே !
உன் விரல் அவன் விரல்
முள்ளால் குத்திப் பார் -
முத்தாய் முளைக்கும் ரத்தம்
இரண்டிலும் நிறம் ஒன்றே !
எங்கேயடா வேற்றுமை ?"
எங்கேயடா வேற்றுமை ?"
கூட்டத்தில் ஓர் குரல் -
"தலை ! உளறாதே !
ஏ ,பி ,ஏபி ,ஓ +,ஓ ~..
ரத்த சாதி தெரியாதா ?"
சாதி விதைப்பதிலே
வெறுப்பிட்டு வளர்ப்பதிலே
தத்தம் வேதங்களின்
ஆணிவேர் அறுப்பதிலே
எம்மதமும் 'சம'மதமே !
'கடவுளை ஒழி !'-
ஓயாது ஊளையிட்டு
வழிபடுதலங்கள் வளர்த்ததுபோல்
'சாதி ஒழிக!'--
மூச்சை மறந்தாலும்
இப்பேச்சை மறக்காத
ஏமாற்று வித்தகர்கள்
ஊட்டிக் கொழுத்த சாதி --
ஊரையே மேய்கிறது ;
நாடு நிணம் நாறுகிறது !
எங்கு நுழைந்திடினும்
சாதியின் சாய் பார்வை ?
சொல்லாது போனால்
விடாத துப்புத் துலக்கம்--
படிப்பு ,வேலை ,சந்து பொந்து,
வீதி, மாவட்டம் ,எங்கணும்
சாதியின் கொடு 'வால்' !
ஊரெல்லாம் உருப்படாத
சாதிச் சிலைகள் --
கேடு கெட்ட பேரணிகள்
சாதி மார் தட்டி -
சாதிக் கத்தியால்
எதிலும் எங்கும் பல வெட்டு !
மாமேதை முதல்
படு அதமன் வரை
எண்ணத்தில் சாதிப் 'பேன் '
அடை அடையாய்--
சாதியால் வழக்கு கோடி-
வட்டாட்சியில் வட்டமிடும்
ஊழலும் பலகோடி -
கண்ணெல்லாம் காட்டுத் தீ !
உதடெல்லாம் எரிவாயு !
நெஞ்செல்லாம் நச்சு -
சாலையெல்லாம் சாம்பல் !
போதுமடா சா.தீ!
சாதிக்குச் சான்றிதழா ?
ஆணிவேர் அழிக்காது
சல்லி வேரிலும் சுகம் கண்டோம் !
பிஞ்சு நெஞ்சுகளில்
சாதி நுழைந்தது எப்போது ?
பள்ளியைச் சாதி
போர்த்திய நாள்தானே !
திருக்குறள் திருடர்கள்
வாக்குப் பிச்சைக்குச்
சாதி ஓடு ஏந்திய நாள்தானே !
சாதி பேசாது
எதிலும் வாய்ப்புகள் வளர்ப்போம் --
ஒழிக என்றால் ஒழியாது--
அசுரப் போட்டிகள் அழிந்தால்
சாதி மெல்லச் சாகும் !
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment