Sunday, March 11, 2012

அதோ ஒரு மரம் நிற்கிறது -
 
அல்ல ..ஒரு உயிர் அல்லவோ அழைக்கிறது !
 
இலைகளில் இசையாய் அழைக்கிறது
 
செவிடாய்ச் செல்ல முடியாது ;
 
மரத்தோடு மணிகள் மறந்திடுமோ ?
 
என்னால் எளிதில் முடிகிறதே !
 
மரத்தின் மொழிகள் நான் அறிவேன்
 
மரத்திடம் முதலில் எனைக் கொடுப்பேன்
 
முழுதாய்ப் பின் அது தனைக் கொடுக்கும்
 
என்னதான் மரத்துடன் பேசுதற்கு ?
 
ஓ...பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறதே !
 
எத்தனை நிகழ்வுகள் அதன் காலடியில் ,
 
உயர் கண் வீச்சுகளில் ,கால ஓட்டங்களில் !
 
மரத்தடியில் அமர்கின்றேன்
 
அன்பாய் அதனை அணைக்கின்றேன்
 
கிளைகளைக் கருணையில் வருடுகிறேன்
 
பச்சிலைகளில் பாசம் காட்டுகிறேன்
 
மலர்களை உச்சி முகர்கின்றேன்
 
நறுமணம் நெஞ்சில் பரவுகிறேன்
 
நட்பை நலமாய் விரிக்கின்றேன்
 
மண்ணுள் உழன்று வியர்த்திருக்கும்
 
வேர்களுக்கும் அன்பை விசிறுகிறேன்
 
மல்லாந்து அதன் மடி படுத்தபடி
 
தலை அணையாய்க் கை சேர்க்கின்றேன் -
 
மென் காற்றால் எனை மெதுவாக்கி
 
பூஞ்சாரலிலே எனை ஆசித்து
 
நேசமுடன் பழம் கதைகள்
 
நேர்த்தியாய் என்னிடம் பகிர்கிறதே !
 
மனிதரோடு பறவைகளின்
 
காதல் கூடல் பிரிதல் எனும்
 
காதற்காவியங்கள் கணக்குண்டோ !
 
பிரிந்திட எனக்கும் மனமில்லை -
 
பைத்தியம் என நீ நினைத்தால்
 
அதற்கு நான் பொறுப்பில்லை !
 
மரம்தனைப் பார்த்தால் மாறுகிறேன்
 
மறு பிறவி நான் எடுக்கின்றேன் !
 
 
 
 
----சந்திர கலாதர்
when you stood hiding in a remote dark corner
and stealthily gazed at the sun full of  love
you looked lovely in full splendour charming the world-
but when you gathered the boldness and appeared before the sun
to declare your deep love in open light
what makes you so pale and dissolve your strong self, o moon?


--s.chandra kalaadhar

Friday, March 9, 2012

அவர்கள் சிறு கிராமத்தில் வாழ்பவர்கள்
 
குண்டும் குழியுமே இணைக்கும் சாலை
 
புழுதியும் புதருமே வரவேற்புத் தோரணங்கள்
 
ஊருக்கே ஒரு கிணறும் ஒரு அடி பம்ப்பும்
 
ஒன்றும் வற்றிப் போனது மற்றது முறிந்து போனது
 
குடம் குடிநீருக்காய் நாளும் நடையாய்த் தொலைவுகள்
 
பள்ளியும் இல்லை மருத்துவ நிலையமோ பல கல் தொலைவில்
 
இவர்கள் எளியவர்கள் இதெல்லாம் குறை என்றே புரியாதவர்கள்
 
எவரிடம் சொல்வது ?எவர் காது தருவார் ?
 
எவர் வந்து பார்ப்பார் ?எதுவுமே தெரியாதவர்கள் -
 
தண்ணீர் இல்லையா? நடந்தே தேய்வார்கள்
 
சாலை இல்லையா? செத்தே மடிவார்கள்
 
ஆனால் எவரிடமும் சொல்லி அறியார்
 
சொன்னால்தான் செய்யத்தான் போவார்களா ?
 
இவர்கள் இருளில் வாழ்பவர்கள்; அநீதி என அழவும் தெரியாதவர்கள்
 
மின்சாரம் வழி தவறி வந்தால்தான் தெரு வெளிச்சம்
 
நமக்கு அவ்வளவுதான் என்று நிறைந்தவர்கள்
 
இக்கிராமம் பெயர் சொல்லி ஜீப்பில் அலையும் அரசினர்
 
இவ்வூருக்குள் நுழைந்ததே கூடக் கிடையாது
 
சாலை போட்டதாய்ச் சொல்லிப் பணம் தின்ற பிணங்கள் உண்டு
 
வெள்ளாடை மருத்துவரை இவர் எங்கே கண்டார் ?
 
பிறந்து விட்டனர் என்பதாலேயே இங்கே வாழ்கின்றனர்
 
முதல் பிற அமைச்சர்களை வெறுங்காலில் பொட்டை வெயிலில்
 
மொட்டைத் தலையினராய் நடக்கவிட்டுப் பார்க்க ஆசை -
 
கிடையில் அடைபட்ட ஆடுகளாய் சிறு கிராமத்தின் மக்கள் அந்தோ !
 
என்று விடியும் இவர்கள் இருட்குடில்கள் ?
 
என்று எரிக்கும் இவர்கள் மௌனம்?
 
 
 
-----சந்திர கலாதர்