வெகு நாட்களுக்குப் பின் உதய வேளையில்
திறந்த வான் மூழ்கி --
விடிந்தும் விடியாத ' சில் ' பொழுது --
மௌன நேரத்தில் பறவை அழைப்புகள் அங்குமிங்குமாய்
சிறுசிறு நீர்க்குமிழ்கள்போல்--
கிழக்கு மெதுவாக வெண்மை பூசிக்கொள்கிறது --
சரியாக 45 டிகிரி கோணத்தில் உயரே விடி வெள்ளி விழித்துப் பார்க்கிறது .
அதுபோல் வடமேற்கு மூலையில் அதே ' பளிச்'சில் மற்றொன்று ;
அது ஒரு வேளை வியாழனோ ?
மேலைக் கோடியிலிருந்து ஒரு ' ஜெட் ' விமானம் சப்தமின்றி
வானிற்கு ஒரு இடுப்புக் கச்சை இழுத்துக் கட்டி வருகிறது
சில நிமிடங்கள் கடந்து மற்றொன்று அதே திசையில் -
வானம் கிழக்கே வெட்கி கனிகிறது
ஒரு பலூனுள் காற்று அடைப்பதுபோல்
' கும்கும் ' என்று ஒளி திசைகளை நிரப்புகிறது .
தன மகளின் பின்னலை அவிழ்த்து வாரிவிடும் தாய் போல்
காற்று 'ஜெட் 'டின் கூந்தலைக் கோதி நீவி விடுகிறது.
கடைசியில் அது அணில் பட்டைவால் போல் ' புசுபுசு ' என்றாகி விடுகிறது .
இரு ஒளிக் கிரகங்களும் மெல்லப் புதைகின்றன .
தேடுகையில் விழிகள் தோற்கின்றன .
வேப்ப மரக் கூந்தல்களில் இரு அழகான பசுங்கிளிகள் -
சிறகை மெல்ல விரிக்கையில் செம்மஞ்சளோடிய மந்திரப் பச்சை!
நாசூக்காய் மெல்லக் குனிந்து வேப்பம் பழங்களை
அவை விரும்பி ருசிக்கையில் ஒரு புதிய சேதியும் அனுபவமும் ஆகிறது.
அவை செல்லும் வரை நான் சிலை ஆகிறேன் .
எனக்கு என் வீட்டுத் திறந்த மாடி தரும் சுகம் ,கற்பனைகள் , தோற்றங்கள்
வேறு எந்தப் பூங்காக்களிலும் என்னை அண்டுமோ ?
இங்கிருந்து என் பார்வை நீந்தலில்
ஒரு அழகிய தொழுகை மாடமும் கண்ணன் கோவில் கோபுரமும் !
சுற்றி மிதக்கும் புறாக்கள் -
திடீர் திடீரென வானில் அலை விரிவாய் மிதந்து உயரே
அமைதியாய்ப் பயணிக்கும் நீர்ப் பறவைகள் !
மரத் துண்டுகள் போல் அடிக்கடி முனகிச் செல்லும் விமானங்கள் --
உதய அந்தி வேளைச் செஞ்சூரியன்கள்--
உதடுகளில் கானம் ஏந்திய காற்று
காலையில் ' சில் 'லாய் மாலையில் ' ஜில் ' லாய் !
என் இரு பொழுதுகளுமே மிக இனிமையானவை !
---சந்திர கலாதர்
16.11.2012 / வெள்ளி / கார்த்திகை 1
காலை மணி 8 /அண்ணா நகர்
--
S.CHANDRA KALAADHAR