Saturday, December 24, 2011

ஓர் அந்தியில் என் நெஞ்சு
 
&
 
மார்கழி --8; சனிக்கிழமை ;
 
24.12.2011;
 
மாலை தேய்ந்து அந்தியின் அழகு -
 
பாலையாய் நெஞ்சு-
 
இளம் துளிர்ப்புகள் விழிக்குமா?
 
மொட்டை மாடி -
 
பரந்த திறந்த வானம் மௌனமாய் ;
 
செஞ்சிவப்பாய் அரை சூரியன் அமிழ்தலில் -
 
ஏதோ ஒரு சிறு சோகம் வானில் -
 
கையிலே தாகூரின் 'தோட்டக்காரன்'-
 
என்னுள் கனக்கிறேன் ;
 
நடக்கிறேன் இங்கும் அங்குமாய்-
 
நிகழ்வுகளை நெடிதாய் உறிஞ்சுகிறேன் ;
 
கீழ் வானத்து மேகங்களை
 
கடைசி நொடிக் கடைக்கண் காதற்பார்வையில்
 
கன்னம் சிவக்க வைக்கிறான் கள்ளமாய்க் கதிரவன் -
 
ஒரு புள்ளிபோல் ஜெட் விமானம்
 
தென் வடலாய் மேலைச் சரிவில்
 
வெள்ளி இரட்டை வால் குருவிபோல் அழகாய்ச் சறுக்குகிறது-
 
குளிர் காற்று சருமத்தின் நுண் துளைகள் வழியெல்லாம்
 
ஒரு 'சில்ல்ல்'ஐஇக் குத்திவிட்டுச் செல்கிறது அவசரம் அவசரமாய் -
 
மசூதிக் கோபுரத்தின் வழி நெஞ்சையே நெகிழ வைக்கும்
 
'வழிபாட்டு அழைப்பு ' வானுள் பொங்கி வழிகிறது -
 
'லா' ' வா' ' ஹூ' என்ற எழுத்தொலிகளுடன்
 
உடைவதுபோல் ஒட்டுவதாய்-
 
முடிவதுபோல் நிதானமாய்த் தொடர்வதுவாய்-
 
தாழ்வதுபோல் சட்டென உயர்வதுவாய் -
 
ஒரு உருகும் அழுகைக் கேவல் தாங்கி -
 
விண்ணுள் எழும்பி கடவுளையே சற்று அசைத்துவிடுவதாய் -
 
நெஞ்சைப் பிழிகிறது-
 
செவிகளில் பணிவு நிறைக்கிறது-
 
இமைகளை மூடித் தைக்கின்றது --
 
மெல்ல இருள் கசிகிறது ;
 
மேகங்கள் சாம்பல் பூக்கின்றன சோகத்தில் -
 
கைகள் கூம்புகின்றன -
 
நிலம் தாழ்ந்து வணங்குகிறேன் -
 
நெஞ்சில் பறந்து நிறையும் ஓர் மகோன்னத அமைதி -
 
"இறைவா !இந்த நொடி அமைதிக்கு நன்றி !"
 
வீட்டினுள் நுழைந்தால் கொசுக்களைவிடக் கவலைகளே சூழும் -
 
கொசுக்கள் சிறு புள்ளிகளாய் ரத்தம் மட்டும் தேடும் -
 
கவலைகளோ உயிரையே கேட்கும் -
 
மாலைகள் என்னை ஏமாற்றியதே இல்லை ;
 
என் பிச்சைப் பாத்திரத்தில் நிறைவாக என்றும் அருள்பவை ;
 
அந்தி வேளைகள் என் சிந்தையில் எண்ணிலாத் தாரகை சேர்ப்பவை-
 
ஓர் அந்தி வேளையே ஓர் நாள் என் அந்தி உயிர்ப்பாகட்டும் !
 
 
 
--சந்திர கலாதர்

No comments:

Post a Comment