Saturday, December 24, 2011

ஓர் அந்தியில் என் நெஞ்சு
 
&
 
மார்கழி --8; சனிக்கிழமை ;
 
24.12.2011;
 
மாலை தேய்ந்து அந்தியின் அழகு -
 
பாலையாய் நெஞ்சு-
 
இளம் துளிர்ப்புகள் விழிக்குமா?
 
மொட்டை மாடி -
 
பரந்த திறந்த வானம் மௌனமாய் ;
 
செஞ்சிவப்பாய் அரை சூரியன் அமிழ்தலில் -
 
ஏதோ ஒரு சிறு சோகம் வானில் -
 
கையிலே தாகூரின் 'தோட்டக்காரன்'-
 
என்னுள் கனக்கிறேன் ;
 
நடக்கிறேன் இங்கும் அங்குமாய்-
 
நிகழ்வுகளை நெடிதாய் உறிஞ்சுகிறேன் ;
 
கீழ் வானத்து மேகங்களை
 
கடைசி நொடிக் கடைக்கண் காதற்பார்வையில்
 
கன்னம் சிவக்க வைக்கிறான் கள்ளமாய்க் கதிரவன் -
 
ஒரு புள்ளிபோல் ஜெட் விமானம்
 
தென் வடலாய் மேலைச் சரிவில்
 
வெள்ளி இரட்டை வால் குருவிபோல் அழகாய்ச் சறுக்குகிறது-
 
குளிர் காற்று சருமத்தின் நுண் துளைகள் வழியெல்லாம்
 
ஒரு 'சில்ல்ல்'ஐஇக் குத்திவிட்டுச் செல்கிறது அவசரம் அவசரமாய் -
 
மசூதிக் கோபுரத்தின் வழி நெஞ்சையே நெகிழ வைக்கும்
 
'வழிபாட்டு அழைப்பு ' வானுள் பொங்கி வழிகிறது -
 
'லா' ' வா' ' ஹூ' என்ற எழுத்தொலிகளுடன்
 
உடைவதுபோல் ஒட்டுவதாய்-
 
முடிவதுபோல் நிதானமாய்த் தொடர்வதுவாய்-
 
தாழ்வதுபோல் சட்டென உயர்வதுவாய் -
 
ஒரு உருகும் அழுகைக் கேவல் தாங்கி -
 
விண்ணுள் எழும்பி கடவுளையே சற்று அசைத்துவிடுவதாய் -
 
நெஞ்சைப் பிழிகிறது-
 
செவிகளில் பணிவு நிறைக்கிறது-
 
இமைகளை மூடித் தைக்கின்றது --
 
மெல்ல இருள் கசிகிறது ;
 
மேகங்கள் சாம்பல் பூக்கின்றன சோகத்தில் -
 
கைகள் கூம்புகின்றன -
 
நிலம் தாழ்ந்து வணங்குகிறேன் -
 
நெஞ்சில் பறந்து நிறையும் ஓர் மகோன்னத அமைதி -
 
"இறைவா !இந்த நொடி அமைதிக்கு நன்றி !"
 
வீட்டினுள் நுழைந்தால் கொசுக்களைவிடக் கவலைகளே சூழும் -
 
கொசுக்கள் சிறு புள்ளிகளாய் ரத்தம் மட்டும் தேடும் -
 
கவலைகளோ உயிரையே கேட்கும் -
 
மாலைகள் என்னை ஏமாற்றியதே இல்லை ;
 
என் பிச்சைப் பாத்திரத்தில் நிறைவாக என்றும் அருள்பவை ;
 
அந்தி வேளைகள் என் சிந்தையில் எண்ணிலாத் தாரகை சேர்ப்பவை-
 
ஓர் அந்தி வேளையே ஓர் நாள் என் அந்தி உயிர்ப்பாகட்டும் !
 
 
 
--சந்திர கலாதர்

Monday, December 5, 2011

இதென்ன கொலவெறி கொலவெறியோ /
&
மூன்று வயதுக் குழந்தைக்கு
இது மட்டும் புரிவதாயில்லை --
எதற்கு இந்த ப்ரீ -கேஜி ,எல் -கேஜி எல்லாம்?
இதென்ன கொலவெறி கொலவெறியோ ?
விழித்தது முதல் கண் விழுவோரை எல்லாம்
ஒரு பரிதாபக் கெஞ்சலுடன்
"இன்னிக்கு ஸ்கூல் இல்லை.. இல்லையாம்மா?
இல்லையாப்பா?என்ன தாத்தா ?
பாட்டீ! இல்லைதானே ?" எனும்
நம்பிக்கையற்ற குரலுடன்
'ஆம்' என்ற கிடைக்காத ஒரு சொல்லுக்காய் ஏங்கி
பாவம் என்னமாய்த் தவிக்கிறது !
அதை மீறி எல்லாமே மிதித்து நடக்கிறது -
இவர்கள் பாசம் எல்லாம் பொய்தானோ ?
கண்ணீரில் கரையாத கற்களோ இவர்கள் ?
முடியுமட்டும் முரண்டு பிடிக்கிறது -
ஒரே வாக்கியம்தான் திருப்பித் திருப்பிச் சலியாது--
"அம்மா ! இன்னிக்கி ஸ்கூல் இல்லேம்மா !"
கெஞ்சல் கொஞ்சல் மிரட்டல் ஆராதனைகள் பின்
ஆடைக்குள் திணிக்கப்பட்டதும்
வாழ்வே இருண்டு வாழ்வும் புரிந்து
கசாப்புக்கடை ஆடாய் கை இழுப்பில்
இல்லாத கொடிய ஸ்கூலுக்கு
வெறித்த விழியில் உயிரற்று நடக்கிறது !
-----சந்திர கலாதர்