Thursday, November 15, 2012

 
வெகு நாட்களுக்குப் பின் உதய வேளையில்
 
திறந்த வான் மூழ்கி --
 
விடிந்தும் விடியாத ' சில் ' பொழுது --
 
மௌன நேரத்தில் பறவை அழைப்புகள் அங்குமிங்குமாய்
 
சிறுசிறு நீர்க்குமிழ்கள்போல்--
 
கிழக்கு மெதுவாக வெண்மை பூசிக்கொள்கிறது --
 
சரியாக 45 டிகிரி கோணத்தில் உயரே விடி வெள்ளி விழித்துப் பார்க்கிறது .
 
அதுபோல் வடமேற்கு மூலையில் அதே ' பளிச்'சில் மற்றொன்று ;
 
அது ஒரு வேளை வியாழனோ ?
 
மேலைக் கோடியிலிருந்து ஒரு ' ஜெட் ' விமானம் சப்தமின்றி
 
வானிற்கு ஒரு இடுப்புக் கச்சை இழுத்துக் கட்டி வருகிறது
 
சில நிமிடங்கள் கடந்து மற்றொன்று அதே திசையில் -
 
வானம் கிழக்கே வெட்கி கனிகிறது
 
ஒரு பலூனுள் காற்று அடைப்பதுபோல்
 
' கும்கும் ' என்று ஒளி திசைகளை நிரப்புகிறது .
 
தன மகளின் பின்னலை அவிழ்த்து வாரிவிடும் தாய் போல்
 
காற்று 'ஜெட் 'டின் கூந்தலைக் கோதி நீவி விடுகிறது.
 
கடைசியில் அது அணில் பட்டைவால் போல் ' புசுபுசு ' என்றாகி விடுகிறது .
 
இரு ஒளிக் கிரகங்களும் மெல்லப் புதைகின்றன .
 
தேடுகையில் விழிகள் தோற்கின்றன .
 
வேப்ப மரக் கூந்தல்களில் இரு அழகான பசுங்கிளிகள் -
 
சிறகை மெல்ல விரிக்கையில் செம்மஞ்சளோடிய மந்திரப் பச்சை!
 
நாசூக்காய் மெல்லக் குனிந்து வேப்பம் பழங்களை
 
அவை விரும்பி ருசிக்கையில் ஒரு புதிய சேதியும் அனுபவமும் ஆகிறது.
 
அவை செல்லும் வரை நான் சிலை ஆகிறேன் .
 
எனக்கு என் வீட்டுத் திறந்த மாடி தரும் சுகம் ,கற்பனைகள் , தோற்றங்கள்
 
வேறு எந்தப் பூங்காக்களிலும் என்னை அண்டுமோ ?
 
இங்கிருந்து என் பார்வை நீந்தலில்
 
ஒரு அழகிய தொழுகை மாடமும் கண்ணன் கோவில் கோபுரமும் !
 
சுற்றி மிதக்கும் புறாக்கள் -
 
திடீர் திடீரென வானில் அலை விரிவாய் மிதந்து உயரே
 
அமைதியாய்ப் பயணிக்கும் நீர்ப் பறவைகள் !
 
மரத் துண்டுகள் போல் அடிக்கடி முனகிச் செல்லும் விமானங்கள் --
 
உதய அந்தி வேளைச் செஞ்சூரியன்கள்--
 
உதடுகளில் கானம் ஏந்திய காற்று
 
காலையில் ' சில் 'லாய் மாலையில் ' ஜில் ' லாய் !
 
என் இரு பொழுதுகளுமே மிக இனிமையானவை !
 
 
---சந்திர கலாதர்
 
16.11.2012 / வெள்ளி / கார்த்திகை 1
 
காலை மணி 8 /அண்ணா நகர்
 
--
S.CHANDRA KALAADHAR